எப்படி படிக்க வேண்டும்
புத்தகங்கள் படிப்பதால் மட்டும் ஒருவர் அறிவாளி ஆகிவிட முடியுமா? முடியாது. முடியவே முடியாது. அறிவு என்பது புத்தகத்திலிருந்து ஒருவருக்கு வருவதா? கிடையாது. கிடையவே கிடையாது. புத்தகங்கள் படிப்பது என்பது மணற்கேணியைத் தோண்டுகிற மாதிரி. அறிவு பிறப்பது என்பது மணல் கேணியில் தண்ணீர் ஊறுகிற மாதிரி. மண்ணைத் தோண்டுவதால் மட்டுமே தண்ணீர் வந்துவிடாது. மண்ணின் மார்பகத்தில் நீரூற்று இருந்தால் மட்டுமே நீர் சுரக்க முடியும்.
அதனால்தான் நிறைய புத்தகங்கள் படித்தும், மனப்பாடம் செய்தும் பலர் அறிவாளிகளாக ஆகாமலேயே செத்துப் போகிறார்கள். அவர்கள் சுயமாகச் சிந்திப்பதே இல்லை. தோண்டுவதால் மட்டுமே தண்ணீர் வந்துவிடுமா? பாலைவனங்களிலும் பாறை நிலங்களிலும் பல நூறு அடி தோண்டியும் தண்ணீர் வருவதே இல்லை. ஏன்? ஆனால் ஆற்றங்கரையிலும் கடற்கரையிலும் ஐந்தடியிலேயே தண்ணீர் வருகிறது.
ஏன்? பலநூறு தடவை பல நூறு புத்தகங்கள் படித்தும் சிலர் அறிவாளி ஆவதே இல்லை!
ஒரு புத்தகத்தை ஒரு தடவை படித்தாலும் சிலர் அதன் அடிஆழத்தை உணருகிறார்கள். எந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்தாலும் இந்த உணர்வோடு எடுங்கள். வெற்றி நிச்சயம். திருக்குறள் படிக்கிறபோது இந்த உண்மையை நான் உணர்ந்து கொண்டேன். "தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு' என்பது தமிழ் மறை. "அறிவு புத்தகத்திலிருந்து வருவதில்லை. அது கற்பவன் மனத்தகத்தில் இருந்து வருகிறது' என்று உணர வேண்டும். சுகி சிவம் ஐயா அவர்களின் வரிகளில் சில.
Comments
Post a Comment